Skip to main content

Northern Provincial Council

ஆளுநர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டனர்.

காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள், கடற்றொழில் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் கௌரவ பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோருடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (07.03.2025) காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

1990ஆம் ஆண்டு வரையில் இயங்கிய காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை போர் காரணமாக மூடப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிமெந்து தொழிற்சாலையை இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவருடன் இணைந்து பார்வையிட்டனர்.

சிமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டது. சிமெந்துக்கான மூலப்பொருளான சுண்ணக்கல் அகழ முடியாத நிலைமை இருப்பதால் அது சாத்தியமில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, அந்தப் பகுதியை பயனுள்ள மற்றும் தொழில்வாய்பை வழங்கக் கூடிய வகையில் வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. உரிய ஆய்வுகள், கலந்துரையாடல்களின் பின்னர், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் தீர்மானிப்பதற்கு இதன்போது முடிவு செய்யப்பட்டது.