Skip to main content

Northern Provincial Council

எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு.

சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும் எனவும், இக்கருத்தரங்கின் ஊடாக முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண நிர்வாகம் தனது முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கு – 2026 இன்று திங்கட்கிழமை (02.03.2026) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கை நிதி ஆணைக்குழுவின் தவிசாளர் சுமித் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் விசேட உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணம் மிக நீண்ட காலமாகப் போரின் தாக்கங்களை எதிர்கொண்டதொரு மாகாணமாகும். எனவே, இங்குள்ள சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பல சிறுவர்கள் தமது தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த நிலையில் வாழ்கின்றனர். ஏனைய சிறுவர்களை விட இவர்களுக்கான தேவைப்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகவும் விசேடமானவை. இன்றும் பல சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். இல்லங்களில் இல்லாத போதிலும், சமூகத்தில் பல சிறுவர்களுக்கு எமது உதவிகள் தேவைப்படுகின்றன. வறுமை காரணமாக எந்தவொரு சிறுவனும் தனது கல்வியை இழந்துவிடக் கூடாது என்பதில் நாம் ஒவ்வொருவரும் அதீத அக்கறை கொள்ள வேண்டும்,’ என வலியுறுத்தினார்.

மேலும், சிறுவர்களை இலக்கு வைத்து சமூகப் பிறழ்வுகள் அதிகரித்து வரும் தற்காலச் சூழலில், அது தொடர்பில் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

இந்த விசேட கருத்தரங்கில், சட்டத்துடன் தொடர்புடைய மற்றும் முரண்படும் சிறுவர்கள், சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக ஆதரவு, கல்வி மற்றும் சிறுவர் பாதுகாப்பு, அத்துடன் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பாதுகாப்பான பயன்பாடு ஆகிய நான்கு பிரதான தொனிப்பொருள்களின் கீழ் விசேட தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் குழு விவாதங்கள் இடம்பெற்றன.

முன்னதாக விருந்தினர்களால் சிறுவர்களின் கை வண்ணங்கள் கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் பல்கலைக் கழகம் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான பதக்கங்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், இலங்கை நிதி ஆணைக்குழுவின் செயலாளர் ஏ.எம்.யு.டி.பி.தென்னக்கோன், மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர் திருமதி ச.லதுமீரா, சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதியும் நிர்வாக மேன்முறையீட்டுத் தீர்ப்பாய உறுப்பினருமான திருமதி சிறிநிதி நந்தசேகரன், ஆசியா அறக்கட்டளையின் பிரதிநிதி திருமதி நிலுகா விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், ஆசியா அறக்கட்டளையின் ‘ஆளுகையை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின்’ பூரண ஆதரவுடன் இந்த விசேட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.