Skip to main content

Northern Provincial Council

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பான கலந்துரையாடல்.

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாக  காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகாரசபையின் பிரதிப்பிரதம செயற்திட்ட முகாமையாளர், காங்கேசன்துறைத் துறைமுக பொறுப்பு அதிகாரி, உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர், வட மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர், வட மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், அதிகாரிகள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

காங்கேசன்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்களே தற்பொழுது உள்ளதால் பயணிகள் வெளியேற நேர தாமதம் ஏற்படுகின்றது. எனவே  மேலதிகமாக இரண்டு  கருமபீடங்களை செயற்படுத்துமாறு துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும்  கடமையாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நடத்தைகள் தொடர்பில் உள்ள முறைபாடுகளை உரிய வகையில் விசாரணை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கையை  துரிதமாக மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் கௌரவ ஆளுநரால் வழங்கப்பட்டது.

சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய கொண்டுவர அனுமதி மறுக்கபட்ட பொருட்கள், பழங்கள் போன்றவை தொடர்பில் பயணிகளுக்கு உரிய விழிப்புட்டல்  காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டின துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

துறைமுகம் மற்றும் விமானநிலைய பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரின்  கருத்துக்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும்  கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டது.