Skip to main content

Northern Provincial Council

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளி வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை கௌரவ ஆளுநர் நேரில் பார்வையிட்டார்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளி வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சனிக்கிழமை (08.03.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.

கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்றுவருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக இந்த வீதியே இருந்து வரும் நிலையில் அதைப் பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு இதன்போது சுட்டிக்காட்டினர்.

இந்த வீதியின் சில பாலங்களும் அமைக்கப்படவேண்டியிருப்பதை இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆர்.விஜயகுமார் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார். வீதியை அபிவிருத்தி செய்வதற்கும் அத்துடன் பராமரிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்புடைய திணைக்களங்களுடன் கலந்துரையாடலை விரைவில் நடத்தி முடிவு எடுப்பதாக ஆளுநர் இந்தப் பயணத்தின்போது விவசாயிகளிடம் தெரிவித்தார்.