வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை (29.01.2025) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது தொழில்நுட்ப சேவையாளர் சங்கத்தால் ஆளுநரிடம் மனுக் கையளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தொழில்நுட்ப சேவை உத்தியோகத்தர்கள் பணியாற்றும் வடக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களிலும் வேறுபட்ட விதங்களில் போக்குவரத்துப்படி வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை மீளமைக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். இடமாற்றங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறும் மனுவில் கோரியுள்ளனர். அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பொறியியலாளர்களை நியமிக்குமாறும், தரக்கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக எந்திரவியல் பொருட்கள் ஆய்வு கூடங்களை அதிகரிக்குமாறும், ஊழலற்ற சிறந்த அபிவிருத்தியை அடைவதற்கு வேலை முன்னுரிமை உரியவாறு பெறப்பட்டதனை உறுதிப்படுத்த பல்வேறு தொகுதியினரை உள்ளடக்கி இறுக்கமாக கண்காணிக்குமாறும், தொழில்நுட்ப கணக்காய்வு தொகுதியை உருவாக்குமாறும், ஒரு வேலை நிறைவேற்றப்பட்டால் அது மீண்டும் மேற்கொள்வதற்கான கால அவகாசம், பராமரித்தல் மற்றும் இயக்குதல் வழிகாட்டிகளை வெளியிடுவதுடன் இறுக்கமாக அதனை நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநரிடம் கையளித்த மனுவில் கோரியுள்ளனர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகள் ஆகியோரையும் உள்ளடக்கி விரைவில் கலந்துரையாடல் நடத்தி இவை தொடர்பில் ஆராய்வதாக ஆளுநர் பதிலளித்தார்.



