யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் கடந்த சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேநாயகன் அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொலிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு, வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கு அமைவாக முதல்கட்டமாக 29 sri 7911 என்ற தனியார் பேருந்தின் உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் சாரதி, நடத்துனர் மற்றும் சிற்றூர்தியின் உரிமையாளர் மேலதிக நடவடிக்கைக்காக உரிய ஆவணங்களுடன் அதிகார சபைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.


