யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தமது அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு அவர்கள் விவரித்ததுடன், மருத்துவத்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்பது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பிலும் தமது திட்டமுன்மொழிவுகளை சமர்ப்பித்து கலந்துரையாடியதுடன், எதிர்காலத்தில் வடக்கின் அபிவிருத்திக்கு தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கமுடியும் எனவும் ஆளுநருக்கு உறுதியளித்தனர்.
இந்தச் சந்திப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளரும் சிறுநீரக தொகுதி அறுவை சிகிச்சை நிபுணருமான பா.பாலகோபி, யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட விரிவுரையாளரும் சமுதாய மருத்துவ நிபுணருமான எஸ்.குமரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளரும் மகப்பேற்று அறுவைசிகிச்சை நிபுணருமான சி. ரகுராமன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளரும் சிறுநீரக வைத்திய நிபுணருமான பிரம்மா ஆர். தங்கராஜா, பிரபல பௌதீகவியல் ஆசிரியர் ரா.குமரன், பத்திரிகை ஆசிரியரும் எழுத்தாளருமான ம. அருளினியன், பொறியியலாளர் ந.நந்தரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.





