அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவுக்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதாநாயகன் அவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் (10.01.2025) இடம்பெற்றது.
நெல் கொள்வனவு செய்வதற்கு போதிய களஞ்சிய வசதிகள் இருந்தபோதும் அதற்குரிய கடன் வசதிகளை வங்கிகள் வழங்கவில்லை என அரிசி ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், எங்களுடைய மாகாணத்தில் விளையும் நெல் வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகரித்த விலையில் மீண்டும் எமது மாகாணத்துக்கு கொண்டு வரப்படுகின்றமையை தவிர்ப்பதற்காக எமது அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் என கோரினார்.
மேலும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடான நெல் கொள்வனவுக்குரிய நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய அலுவலக முகாமையாளர் ஏனைய அரச மற்றும் தனியார் வங்கிகளின் முகாமையாள்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது, கடந்த காலங்களிலும் கடன்கள் வழங்கப்பட்டதாகவும் இம்முறையும் கடன் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
குறைந்த வட்டி வீதத்தில் நெல் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடன் எல்லையை உயர்த்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது அது நிதியமைச்சின் கொள்கை தீர்மானம் எனவும் வங்கி முகாமையாளர்கள் சுட்டிக்காட்டினர். இலங்கை முழுவதும் ஒரே நடைமுறையே பின்பற்றப்படுவதாகவும் குறிப்பிட்டனர். இருப்பினும் வடக்கிலுள்ள விவசாயிகளின் நெல்லை இங்குள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
இதேவேளை அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் நெல் கொள்வனவு விவரங்களை வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளருடன் பகிர்ந்து கொள்ளுமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கினார். இதன் ஊடாக சில விடயங்களைக் கண்காணித்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், நெல் கொள்வனவுக்கு சங்கங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் ந.திருலிங்கநாதன், ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு திணைக்கள உதவி ஆணையாளர்களுக்கு அறிவுத்தல் வழங்கினார். அத்துடன், நெல்லை மத்திய கொள்வனவு நிலையம் ஊடாக கொள்வனவு செய்து அதனை கட்டுப்பாட்டு விலையில் அரிசியாக்கி விற்பனை செய்வது தொடர்பில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் முகாமையாளர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்துரையாடுமாறும் பணித்தார். இதேவேளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நெல் விதைப்பின் ஊடாக அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஏனைய விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் ந.திருலிங்கநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் திருமதி பகீரதி செந்தில்மாறன், அரச மற்றும் தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.






