நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி – உரிய இடம் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிய காலம் பொற்காலம் எனப் பாராட்டினார்.
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளராக இருந்த சிவகுருநாதன் திருவாகரன் அவர்களின் மணிவிழாவும் சேவைநயப்பும் நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (27.12.2024) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அவர்கள், திருவாகரன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். ஆளுநர் தனது உரையில், சி.திருவாகரன், தற்போதைய பிரதம செயலர் இ.இளங்கோவன், பொதுச்சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் தான் உள்ளிட்ட 4 பேரும் இலங்கை நிர்வாக சேவைக்கு ஒரே காலத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே அணியினர் என்பதை நினைவுகூர்ந்ததுடன் 1991 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமது முதல் நியமனங்கள் எவ்வாறிருந்தன என்பதையும் குறிப்பிட்டார். அன்றைய கடினமான காலத்தில் எவ்வாறு பணியாற்றினோம் என்பதையும் குறிப்பிட்டதுடன், திருவாகரன் அவர்களது தந்தையாரும் நேர்மையான ஒருவர் எனவும் அவ்வாறு நேர்மையாக இருந்தமையால் பதவி உயர்வுகள் கூட அவருக்கு மறுக்கப்பட்டன என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவி என்பது மிக முக்கியமானது என்பதுடன் பரீட்சை வினாத்தாள்களின் இரகசியத்தை பேணுகின்ற இந்தப் பதவியில் திருவாகரன் மிகத் திறம்பட பணியாற்றியிருந்தார் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். தவறான விடயங்களைச் செய்யுமாறு அழுத்தங்கள் திருவாகரனுக்குப் பிரயோகிக்கப்பட்டமையால் வடக்கு மாகாணத்திலிருந்து அவர் கடந்த காலங்களில் இடமாற்றம் பெற்று கொழும்புக்குச் சென்றமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், திருவாகரன் தனது பதவிக்காலத்தில் ஒருபோதும் இவ்வாறான அழுத்தங்களுக்கோ மற்றையவர்களின் செல்வாக்குக்கு இடம்கொடுத்த ஒருவரும் அல்ல என்றும் தெரிவித்தார். அவரை எனது நண்பன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார். திருவாகரன் முதல் நியமனம்பெற்ற மாந்தை கிழக்கு (பாண்டியன்குளம்) மக்கள் இன்றும் அவரது சேவையை மறக்காமல் பாராட்டுவதென்பது அவரது ஒட்டுமொத்த சேவைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள், வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராகப் பதவியேற்கவுள்ள பொ.குகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருவாகரனது சேவையைப் பாராட்டி நூலும், ஒலிநாடாவும் வெளியிட்டு வைக்கப்பட்டது.







