முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று காலை ஆளுநர் செயலகத்தில் (26.11.2024) இடம்பெற்றது.
முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது இயன்றளவு சுற்றாடல் பாதிப்புக்கள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர், சுற்றுலாசார் முதலீட்டுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக வனவளத் திணைக்களம் பிரதேச செயலர்கள், மாவட்டச் செயலர்கள் என எவருக்கும் தெரியாமல் காணிகளை தமது திணைக்களத்துக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதனால் இந்த நிலைமை ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மாகாண காணி ஆணையாளர் அ.சோதிநாதன், வேலணை, வடமராட்சி கிழக்கு மற்றும் காரைநகர் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.






