Skip to main content

Northern Provincial Council

“ராமாயணா” கலாசார மாநாடு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பழமையானது. அந்த ஆழமான தொடர்பை இராமாயணத்தை விட வேறு எந்தவொரு இதிகாசமும் தெளிவாக விளக்கவில்லை. இராமாயணத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்கள் இன்றும் எங்கள் நிலத்தில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி கலாசார சுற்றுலாவை மேம்படுத்தவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகமும், இவன்ரோக் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘ராமாயணா’ கலாசார மாநாடு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில் தெரிவித்ததாவது, பல நூற்றாண்டுகளாக, இராமாயணமும் மகாபாரதமும் மனிதகுலத்துக்கு உயர்ந்த இலட்சியங்களை வழங்கும் அடித்தள நூல்களாகச் செயல்பட்டு வருகின்றன. இவை நமது இரு நாட்டு மக்களுக்கும் பொதுவான காவியமாக மாறியுள்ளன. வடக்கு மாகாண மக்களின் மனதில் இராமாயணம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. கம்பராமாயணம் என்ற மாபெரும் காவியம் தமிழ் இலக்கியத்தின் ஒரு மூலக்கல்லாகக் கொண்டாடப்படுகிறது. இது நமது மொழியை வளப்படுத்துகிறது.

இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் உருவங்கள் அல்ல. அவர்கள் தமிழ் கலாசாரத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்த மதிப்புக்களின் உருவகங்கள். ஒரு நீதியுள்ள தலைவர் தனது தனிப்பட்ட துயரங்களுக்கு அப்பால் தனது மக்களை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை இராமர் என்ற கதாபாத்திரத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். மேலும் சீதாவிடமிருந்து, தூய்மை, அன்பு, தியாகம் மற்றும் மகத்தான துன்பங்களைத் தாங்கும் வலிமை ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறோம். அவளுடைய அசைக்க முடியாத பக்தி மற்றும் நீதி ஒரு சக்திவாய்ந்த உதாரணமாகவே உள்ளது.

இந்தக் காவியம் வெறும் நூல்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட கதை அல்ல. அதன் மரபு இலங்கையின் நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. இராமாயண வரலாற்றின் உயிருள்ள சான்றுகளாகவும், சுற்றுலாப் பயணிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு விலைமதிப்பற்ற தளங்களாகவும் செயல்படும் ஏராளமான இடங்களுக்கு எங்கள் தீவு தாயகமாகும்.

சீதை சிறைபிடிக்கப்பட்ட இடம், அசோக வனம், இன்று நுவரெலியா மாவட்டத்தில் சீதா எலியா என்று அழைக்கப்படுகிறது. பெரும் போருக்குப் பிறகு விபீஷணன் முடிசூட்டப்பட்ட இடமாக களனி கோயிலாக அடையாளம் காணப்படுகிறது. சிலாவத்தில், முனேஸ்வரம் மற்றும் மானாவாரி கோயில்கள் உள்ளன. அங்கு இராமர் போரிலான எந்த பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது. லக்ஷ;மணனை குணப்படுத்த ஹனுமான் சுமந்து சென்ற சஞ்சீவனி மலையின் ஒரு பகுதியாக ருமாஸ்ஸலா நம்பப்படுகிறது. சீதையின் தூய்மையை நிரூபிக்க தீயால் துன்புறுத்தப்பட்ட இடம் திவுரும்பொல என்று நம்பப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் இன்னும் பல, இந்த மாபெரும் காவியத்துடன் எமது நிலம் பகிர்ந்து கொள்ளும் ஆழமான தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிகழ்வுகள் பல்வேறு கலாசார கற்றலுக்கான முக்கியமான தளங்களாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார மற்றும் பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தப் பகிரப்பட்ட மரபை நாம் கொண்டாடும் வேளையில், அதைப் பாதுகாப்பதிலும் நாம் உறுதியளிக்க வேண்டும். இந்த பண்டைய தளங்களைப் பாதுகாப்பதிலும் கலாசார சுற்றுலாவை மேம்படுத்துவதிலும் அனைவரும், குறிப்பாக எமது இளைஞர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்வதன் மூலம், எமது கடந்த காலத்தை மதிக்க மட்டுமல்லாமல், எதிர்வரும் தலைமுறைகளுக்கு எமது நாடுகளுக்கு இடையிலான பிணைப்புகளையும் வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது, என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி அவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.