Skip to main content

Northern Provincial Council

ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதென்பது மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சிப் பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும், கரைஎழில் நூல் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை (22.12.2024) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப்போர் ஆரம்பமானது. இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம். உங்களுடைய தற்போதைய மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் நேர்மையான ஒருவர். மக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் துயர்துடைக்கக்கூடிய ஒருவர். அவர் உங்களுக்கு மாவட்டச் செயலாளராகக் கிடைத்தமை சிறப்பானது.

இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண முடியவில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கின்றது. வீதிகளில் குப்பைபோடுகின்றோம். வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம். ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம். மிகக் கவலையாக இருக்கின்றது.

விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலாளரும், மாவட்டச் செயலாளரும் என்னிடம் சொன்னார்கள். உண்மையில் வேதனையாக இருக்கின்றது. எமது பிரதேசத்தின் பண்பாட்டு விழாவுக்கு வருகின்றார்கள் இல்லை. ஆனால் குத்துப்பாட்டுக்களுடன் நடக்கும் நிகழ்வுகளுக்கு அள்ளுகொள்ளையாகச் செல்கின்றார்கள்.

ஏனையவர்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோசம் இருக்கின்றது. ஆனால் இன்று எம்மில் பலர் பணம்தான் சந்தோசம் என்று நினைக்கின்றார்கள். பணம் சந்தோசத்தை தராது. ஒருவனுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு பல மடங்கு பல்வேறு வழிகளில் திருப்பி உதவி கிடைக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அதேபோல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றையவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்தவேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறுகூறி விட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கின்றார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றது.

எங்களுக்கு பதவிகள் தரப்பட்டது மக்களுக்கு சேவைசெய்யவே. அதை சகல அலுவலர்களும் மனதிலிருத்துங்கள். உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது மனிதநேயமற்று நடப்பதற்கு மனம்வருமா? எனவே தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சகலரும் சிறந்த சேவைகளை வழங்க முன்வரவேண்டும், என்றார்.